குப்பைமேனியின் மருத்துவ குணங்கள் (Indian Acalypha Medical Benefits)

குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி,herbal பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன.

குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். பருமன் / கொழுப்பைக் குறைக்கும் பதிவுரிமை செய்யப்பட்ட மருந்து குப்பைமேனியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

குப்பைமேனி தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலுமுள்ள சமவெளிப் பகுதிகளில் மிகவும் சாதாரணமாக பரவிக் காணப்படுகின்ற ஒரு களைச் செடி. இரண்டரை அடி வரை உயரமுள்ளது.

குப்பைமேனி மாற்று அடுக்கிலும் வட்ட அடுக்கிலுமாக அமைந்த, ஓரத்தில் பற்களுடன், பல அளவுகளில் உள்ள இலைகளை உடைய தாவரம். இலைக்காம்புகளின் இடுக்குகளில் அமைந்த பசுமையான, கொத்தான பூக்களைக் கொண்டது.

குப்பைமேனி தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும், சாலை ஓரங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும், சாதாரணமாக களைச் செடியாக பரவிக் காணப்படும். பூனைவணங்கி என்கிற மாற்றுப் பெயரும் வழக்கத்தில் உள்ளது. குப்பைமேனி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது.

தோல் நோய்கள் குணமாக குப்பைமேனி இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவர வேண்டும் அல்லது குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, 3 மணி நேரம் ஊறவைத்து, கழுவி வரலாம். நீண்ட காலமாக உள்ள தோல் நோய்களுக்கு, குணமாகும்வரை, ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் வீதம், மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றி வர வேண்டும்.

பிடி குப்பைமேனி வேர், கழுவி சுத்தம் செய்து கொண்டு, 1 லிட்டர் நீரில் இட்டு, 200மி.லி. ஆக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி, குடிக்க பூச்சிகள் வெளியாகும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. இந்த நிலையில் தயிர் சாதம் கொடுக்கலாம். சிறுவர்களுக்கு இந்த அளவில் ¼ பங்கு மட்டும் கொடுக்க வேண்டும்.

குப்பைமேனி இலைச் சாற்றினை 4 துளிகள் அளவு நாக்கில் தடவலாம் அல்லது குப்பைமேனி இலையைக் காய வைத்துத் தூள் செய்து, ¼ தேக்கரண்டி அளவு உட்கொண்டுவர கோழை வெளிப்படும்.

குப்பைமேனிச் செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, இலேசாக நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க சளி இருமல் கட்டுப்படும்.

குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவை சம அளவாக எடுத்துக்கொண்டு, வாணலியில் ஒன்றாக விட்டு, சுண்டக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். மூட்டுவலியுள்ள பகுதிகளில் இதனை நன்றாகத் தேய்க்க மூட்டுவலி தீரும்.

வண்டுக்கடி வீக்கம் குணமாக இலையை அரைத்து வீக்கத்தின் மீது பற்றுப்போட வேண்டும்.

தேக ஆரோக்கியத்திற்கு:
பெண்கள் குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் கழுவிவர, முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைவதுடன் முகம் பளபளப்பாக மாறும்.

10 குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டுவர, தேக அழகும், ஆரோக்கியமும் ஏற்படும்.

Leave a Reply